கலைஞர் கருண நிதியின் கற்பனைச் சோலையிலே குலுங்கிடும் கனிகள், காலத்தின் தூதுவர்களுக்குக் கருத்துச் சுவையை வாரி வழங்குபவை.
புளிக்கிறது எனப் புலம்பிடும் புதுமைப் பகைவர்களும், கசக்கிறது எனக் கதைத்திடும் கடவுள் தூதர்களும் - யாரும் காணாத இடத்திலே கருணாநிதியின் கற்பனைக் கனிகளைச் சுவைத்து மகிழ்கிறார்கள். 'அருமை அருமை' என அகமும் முகமும் மலரப் பாராட்டுகிறார்கள். தீண்டினால் திரு நீலகண்டம் எனத் துள்ளிக் குதிப் போரும், தென்றலின் இனிமையிருக்கிறதப்பா அந்த எழுத்திலே என்று திரைமறைவிலே திண்ணைப் பேச்சு நடத்துகிறார்கள். பகுத்தறிவுப் புரியினர்க்குப் படைக்கலமாக, பழமை வாதிகளுக்கு ஒளிவிளக்காக, அமைந்திடும் எழுத்துச் சித்திரங்களைத் தீட்டுவதிலே கருணாநிதி வல்லவர். சலியாத உழைப்பென்னும் எருவிட்டு, கொள்கை, லட்சியம் என்கின்ற கனி மரங்களை வளரவிட்டு, கர்மவீரர்களுக் குக் களைப்புப் போக்கும் வகையிலே களிப்பூட்டும் தன்மையிலே அறிவுக் கனிகளை அவர் அளித்திடத் தவறியதே யில்லை. அங்ஙனம் அவர் தந்த கனிகளிலே ஐந்து கனிகளைக் கூடையிலே எடுத்து வைத்து அழகு தமிழ் குமரியொருத்தி இலக்கிய வீதியிலே நடை போடுகிறாள். அவளுக்கும் உங்களுக் கும் இடையிலே நின்று, பழ வியாபாரத்தைத் தடை செய்ய நாம் விரும்பவில்லை. சுவையுங்கள் அந்த எழுத்துக் கனிகளை!
சிறைச்சாலை இரவு நேரம் [சங்கு, சந்தனம் என்ற இரண்டு கைதிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ] சங்கு: என்னா சந்தனம் அண்ணே! சந்தோஷம்தான் உனக்கு, நாளைக்கு விடுதலையாகப் போறே! உம்-அச்சடிச்ச சோறும் அவுன்ஸ் குழம்பும் வேப்ப மரத்து காத்தும், வேர்க் கடலை உருண்டையும்-இன்னையோட சரி-இல்லையா?